"யாரங்கே? என்ன சத்தம்?"
"ராஜாதி ராஜன் எமதர்மராஜனுக்கு வணக்கம். சொர்க்கத்தில் ஒரே கலவரம்...அதான் சத்தம்..."
"என்னது? சொர்க்கத்தில் கலவரமா? என்ன நடந்தது?"
"சொர்க்கத்திலே மது பானத்தை அறிமுகப்படுத்தி, சொர்க்கத்தையே நரகம் ஆக்கி விட்டதாகப் பெண்கள் பலர் போராட்டம் செய்கின்றனர் !"
இது என்ன கதை? சொர்க்கத்தில் மது பானம் எப்படி வந்தது? என்று நினைப்பவர்களுக்கு...இதோ..."நடந்தது என்ன?"
பூமியில் இறந்த அரசியல்வாதி, "முறுக்கு மணி", எமலோக தர்பாரில் நிற்கிறான். அவனது "ரெக்கார்டை" பார்த்து அவனை நரகத்தில் தள்ளுகிறார்கள்...சில நாட்கள் கழித்து, எமதர்மன் நரகத்தை வலம் வரும் போது, அந்த அரசியவாதி, அங்கு இருந்த மற்றவர்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்த்தான்...!
"நகரத்தில் வாழ்ந்த நம்மையெல்லாம் நரகத்தில் தள்ளிவிட்டார்கள். கேட்டால், லஞ்சம் வாங்கினாய், ஊழல் செய்தாய்...கொலை செய்தாய் என்று சொல்கிறார்கள் ! கொலை செய்தால் என்ன? நரகமா? அப்படியென்றால், இவர்கள் செய்வதும் கொலைதானே? மனித வாழ்வினை பூமியில் முடிக்கிறார்களே! நீங்கள் எல்லாம் சற்று சிந்திக்க வேண்டும்...!" - கூட்டத்தில் பேரமைதி கலைந்து ஒரு சலசலப்பு...
தொடர்கிறான்..."லஞ்சம், ஊழல் பற்றியெல்லாம், நாம் இவர்களுக்கு சொல்லித் தரவேண்டும்...அப்போது தான் அதன் மூலம் எப்படி சீக்கிரம் வருமானம் கூட்டலாம் என்பது அவர்களுக்குப் புரியும்..இதறகான முயற்சிகளை என் கண்மணிகளாகிய நீங்கள், எனது தலைமையில் எடுக்க வேண்டும்..."
பேச்சினை ஒட்டுக்கேட்ட எமதர்மன், நரகத்தில் இது போல வீர உரைகளைக் கேட்டிராததால், அரசியல்வாதியின் பேச்சில் மயங்கினான்....அந்த இடத்தில் இருந்து ஆழ்ந்த யோசனையுடன் நகர்ந்தான்...சற்று நேரம் கழித்து, அவைக்காவலனை விட்டு அந்த அரசியல்வாதியை அழைத்து வரச் சொன்னான்..
கைகளைத் தூக்கி வணக்கம் சொன்னாவாறு, அரசியல்வாதி வந்தான்....
"ஹா..ஹா...முறுக்கு மணி !...நீ நன்றாகப் பேசுகிறாயே ! இதெல்லாம் எப்படி?"
"அது இருக்கட்டும்...உங்கள் ராஜ்யத்துக்கு நான் ஒரு புதிய திட்டம் சொல்கிறேன்...அறிமுகப்படுத்துங்கள்..."
"என்ன அது..?"
"நாங்கள் எல்லாம், பூமியில் இருக்கும்போது, மது அருந்தி அதிலேயே சொர்க்கத்தைப் பார்த்திருக்கிறோம்...இங்கே, சொர்க்கம் என்று ஒன்று இருக்கிறது...ஆனால், அதில் மதுபானம் இல்லையே..."
"நீ என்ன சொல்கிறாய்?"
"இந்தத் திட்டத்தின் படி மதுபானம் தயார் செய்து சொர்க்கத்திலும், நரகத்திலும் அறிமுகம் செய்யுங்கள்...உங்கள் தம்பிக்கே இதைத் தயாரித்து, விநியோகிக்கும் அனுமதி கொடுங்கள்...அப்படியே என்னையும் பார்டனர் ஆக்கிடுங்கள்...கஜானாவும் நிரம்பும்..."
எமதர்மனுக்கு இந்த ப்ரபோசல், இன்ட்ரஸ்டிங்காகப் பட்டது...சிந்தனையில் மூழ்கியபடி, லேசாகத் தலை அசைத்தான்...
"அப்ப நான் வர்ரேனுங்க..." - முறுக்கு மணி அங்கிருந்து நகர்ந்தான்...
இதுதான் நடந்தது...
நல்லாயிருந்த "சொர்க்கம்", நரகமானது - போராட்டம் தலையெடுத்தது...
***********************************************************************************
மீண்டும் லைவ்...
தகவல் சொன்னவனிடம், எமதர்மன் சொன்னான்..."அந்த முறுக்கு மணியை அழைத்து வா...அவனிடமே இதற்கு என்ன தீர்வு என்று கேட்கிறேன்..."
சற்று நேரத்தில் முறுக்கு மணி அங்கு தள்ளாடியவாறே வந்தான்...ஸ்டடியாய் இருப்பது போல், கும்பிடு போட்டான்...
"உன் பேச்சைக் கேட்டு, மது பானம் விற்றதால், இப்போது சொர்க்கமே, நரகம் ஆகிவிட்டது...என்ன செய்யலாம்...நீயே சொல்..."
"போராட்டத்தை நிறுத்தினா...மது விலக்கு அமலாகும்ன்னு சொல்லுங்க..."
"அப்ப...என் தம்பியோட கதி?"
"அதை நான் பாத்துக்கறேன்..."
மீண்டும் யோசித்தபடியே எமதர்மன் லேசாகத் தலையசைத்தான்...சொர்க்கத்தில் மது பானம் கிடைக்காது என்று உத்தரவு பிறப்பித்தான்...வருமானம் குறைந்தது...
சில நாட்களில்...மீண்டும் கலவரம்...சத்தம்...
என்ன என்று விசாரித்தான் எமதர்மன்...
"முறுக்கு மணி, சொர்க்கத்தில் மதுக்கு அடிமை யானவர்களை ஒன்று சேர்த்து, மது விலக்கு அமல் படுத்தியதை எதிர்த்து போராட்டம் செய்கிறான் !"
"???????????"
----------------------------------------------------------------------------------------------------
இது முழுதும் கற்பனையே..யாரையும் புண்படுத்துவது நோக்கமல்ல...ஜஸ்ட் எல் ஓ எல்...!